Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தாயின் கருவறையில் இருக்குபோதே, ‘கட்’, ‘ரைட்’ சத்தம் கேட்டு வளர்ந்தவர் சிம்பு. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோவாக அவதாரம் எடுத்தார். சிறு வயது முதல் சினிமாவில் ஜொலித்ததால் பல சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் இவருடைய பட வாய்ப்புகள் குறைந்தது.
இதனால் விட்ட இடத்தை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார். இதற்கிடையே சிம்பு உடல் எடை கூடியதால் தற்போது தன்னுடைய ரசிகர்களுக்காக உடல் எடையை வெகுவாக குறைத்து தீயாக வேலை செய்ய ஆரம்பித்துள்ளார். இதன் பலனாக சிம்புவின் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ படம் 30 நாட்களில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதனை தொடர்ந்து மாநாடு பட சூட்டிங்கில் சிம்பு பிசியாகியுள்ளார். இதை முடித்து கொடுத்த பிறகு ஏற்கனவே நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படங்களை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல இயக்குநர்கள் சிம்பு கால்சீட் கேட்டு வரிசைகட்டி நிற்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கிடையே, ‘மாநாடு முடிந்தாலும் உங்களை விடப்போவதில்லை’ என மாநாடு பட இயக்குநர் கறாராக கூறிவிட்டாராம்.
அதாவது, கொரோனா காலகட்டத்தில் மாநாடு படத்திற்கு பதிலாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்க தயார் செய்யப்பட்ட வெங்கட் பிரபுவின் கதையில் தான் சிம்பு நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். இந்தப் படத்தின் மூலம் 12 கோடி ரூபாய் லாபம் பெற முடியும் என்று கணக்கிடப்பட்டு உள்ளதாம். இதனால் மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு மீண்டும் வெங்கட்பிரபு கதையில் ஏறக்குறைய நடிப்பது உறுதி என கிசுகிசுக்கிறது சினிமா வட்டாரம். இந்த தகவல் சிம்புவின் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது.